“4த் ஃப்ளோர்” – இசை வெளியீட்டு விழா !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் சேரன் பேசியதாவது..,
திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.
“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.

இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,
நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்
அந்த ஃப்ரேமுக்கு, ஒரு தனி உயிர் கிடைக்கிறது. அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை, அமைதி, சென்சிபிலிட்டி.
எதையும் மிகைப்படுத்தாமல், இயல்பாகவே கவர்கிறவர் அவர். நடிகனாக மட்டுமல்ல, மனிதராகவும் மதிக்கத் தக்கவர். அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார்.
அதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.
நடிகர்களும் டெக்னிக்கல் டீமும்
ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள். சினிமா என்பது தனி மனித சாதனை அல்ல
என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.
இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரி பேசியதாவது..,
இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.

பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி. இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *