
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம்.
‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்
இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
விஜய பிரபாகரன் பேசும்போது,
தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏகனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.